தமிழக செய்திகள்

சென்னையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 54 விளம்பரப் பலகைகள் அகற்றம் - ரூ.2.29 லட்சம் அபராதம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திற்குப்ட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 54 எண்ணிக்கையிலான விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு ரூ.2,29,800 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரப் பலகை அமைக்க விரும்புவோர், சென்னை மாநகராட்சி ஆணையரிடம் https://erp.chennaicorporation.gov.in/portal/login.jsp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒற்றைச் சாளரக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, அனைத்து விதிமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்டு, உரிய கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் உரிமம் வழங்கப்பட்டு வருகின்றது. உரிமம் பெறப்படாத மற்றும் விதிமீறல் விளம்பரப் பலகைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அவ்வாறாக, சென்னை மாநகரில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 25.06.2026 அன்று ஒரு நாள் மட்டும் தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 54 எண்ணிக்கையிலான விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு ரூ.2,29,800 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.