தமிழக செய்திகள்

கோவை மாநகராட்சியில் விதிகளை மீறி நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணிநீக்கம்

மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், 54 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

சென்னை,

கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளர்கள் 54 பேர், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் இன்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

அ.தி.மு.க. ஆட்சி

கோவை மாநகராட்சியில், அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமல் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

54 இளநிலை உதவியாளர்கள்

இந்த சூழலில், இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், கோவை மாநகராட்சியில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. காலியான பணியிடங்களுக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், முறைகேடான பணி நியமனங்களுக்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

பணி நீக்கம்

சென்னை ஐகோட்டின் தீர்ப்பினை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், 54 பேரையும் பணி நீக்கம் செய்து கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இளநிலை உதவியாளர்கள் 54 பேரும் இன்றுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.