கிருஷ்ணகிரி,
ஒரே இரவில் 6 மாடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கீழ் சோமார்பேட்டை மற்றும் சின்ன ஏரிக்கரை பகுதிகளில் பொது மக்கள் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை மாடுகளை பார்க்க சென்ற போது வினோத், மாலா, புஷ்பா, அம்பிகா மற்றும் ராஜ்குமார் ஆகியோருக்கு சொந்தமான 6 மாடுகள் காணாமல் போனது தெரியவந்தது.
மாடுகள் மாயமானதை தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் மாடுகளை இழுத்துச் சென்று, தயார் நிலையில் இருந்த வேனில் ஏற்றி கடத்திச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து மாடுகளின் உரிமையாளர்கள் கிருஷ்ணகிரி நகர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். இதனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.