திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கரூர் தேசிய நெடுஞ்சாலை காவல்துறை சோதனைச்சாவடி அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாலையின் மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவலர் ரவிச்சந்திரன் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே சாலையில் அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் காவலர், லாரி ஓட்டுநர், காரில் பயணம் செய்த 4 பேர் என 6 பேர் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு, பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விபத்துக்குள்ளான லாரி மீது கார் மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.