தமிழக செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் டிரைவர் கொலை வழக்கில் 6 பேர் கைது

திருக்கழுக்குன்றத்தில் டிரைவர் கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருக்கழுக்குன்றம் அடுத்த மேலகனக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டர் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் காட்டு பகுதி வழியாக சென்று கொண்டிருந்த கண்ணனை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்ட கண்ணனுக்கும் அதே ஊரை சேர்ந்த திருமணம் ஆன சொக்கம்மாள் (43) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. சொக்கம்மாளின் மகன் விஜய் (23) தனது தாயிடம் கள்ளக்காதல் குறித்து பலமுறை கண்டித்தும் அவர் கள்ளக்காதலை கைவிடாமல் இருந்ததாக தெரிகிறது.

மனமுடைந்த விஜய் தாயின் கள்ளக்காதலன் கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டு தனது நண்பர்களான மானாமதி பகுதியை சேர்த்த மகேந்திரன் (28) மற்றும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த கபில் ஆனந்த் (26), விஷ்ணு (25), ராகுல் (21), நரசிம்மன் (26) ஆகியோர் சேர்ந்து கண்ணனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். போலீசார் விஜய் உள்பட 6 பேரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT