சென்னை,
தெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு (நாய்கள் மற்றும் பூனைகள்) மைக்ரோசிப் செலுத்துதல், வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை சென்னை மாநகராட்சியில் கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதள சேவையானது, செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களின் தடுப்பூசி விவரங்கள் மற்றும் மீண்டும் அடுத்த தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய தேதிகளை திறம்பட கண்காணிக்க உதவுகிறது.
செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதிபடுத்தவும், இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட நாள் முதல் ஓராண்டு முடிந்த நிலையில் மீண்டும் உரிமம் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்யவும், செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதை தடுக்க மைக்ரோ சிப் செலுத்தி உரிமம் பெறுவது சென்னை மாநகராட்சியில் கட்டாயமாக்கப்பட்டள்ளது. இந்த மைக்ரோ சிப்பில் செல்லப்பிராணிகளின் உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தரவுகள் பதிவு செய்யப்படும்.
சென்னை மாநகராட்சி இணையதளத்தில் இதுவரையில் 1,26,781 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 1,15,119 செல்லப்பிராணிகளுக்கான உரிமங்களில் 64,586 உரிமம் வழங்கப்பட்டுள்ளன. 74,740 செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு, 78,328 வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் உள்ள செல்லப்பிராணிகள் ஆஸ்பத்திரியில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே, செல்லப்பிராணிகள் உரிமையாளர்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்தி தங்களின் வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ஆண்டுதோறும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.