கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் கடல் ஆமை முட்டைகளைப் பாதுகாப்பது குறித்து வனத்துறை அதிகாரி அன்பு தலைமையில் தீவிர விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் வரை ஆலிவ் ரிட்லி (பங்குனி ஆமை) வகை ஆமைகள் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைக்கு வந்து முட்டையிடுவது வழக்கம். ஒரு ஆமை சராசரியாக 140 முதல் 170 முட்டைகள் வரை இடும். இந்த ஆண்டு லெமூர் கடற்கரை, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 6,504 முட்டைகள் வனத்துறையினரால் பாதுகாப்பாகச் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஆமை முட்டைகளைப் பாதுகாக்க நான்கு இடங்களில் பாதுகாப்புக் கூடங்களும், லெமூர் மற்றும் துவாரகாபதி பகுதிகளில் 3 பொரிப்பகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட முட்டைகளில் இருந்து இதுவரை 1,448 ஆமை குஞ்சுகள் பொரிந்து வெளிவந்துள்ளன. அவை வனத்துறையினரால் பாதுகாப்பாகக் கடலில் விடப்பட்டன.
தற்போது கோடைக் காலம் என்பதால், எஞ்சிய முட்டைகளைப் பாதுகாக்கவும், புதிய முட்டைகளைச் சேகரிக்கவும் வனப்பணியாளர்கள் கடற்கரைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.