சென்னை,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியில், கஞ்சா போதையில் இருந்த சில இளைஞர்கள், 66 வயது மூதாட்டியைக் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக வெளியாகியுள்ள செய்தியைப் படிக்கும் போதே உடல் கூசுகிறது. கடந்த ஐந்தாண்டுகால திமுக ஆட்சியில் பெருகி வரும் கஞ்சா புழக்கம், நமது இளைஞர்களின் மூளையை முழுவதுமாக அரித்துவிட்டது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இச்சம்பவம்.
கடந்த ஒரு வாரமாகவே எங்கு திரும்பினாலும் பாலியல் வன்கொடுமை செய்திகளும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுபவர்களின் அழுகுரலும் தான் நமது செவிகளை நிறைக்கின்றன. “பெண்களுக்கெதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என ஒருபுறம் வீரவசனம் பேசிக்கொண்டு, மறுபுறம் மழலை முதல் மூதாட்டி வரை எந்தப் பெண்களும் நிம்மதியாக வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றியது தான் திமுக அரசின் முக்கிய சாதனை.
இப்படி பெண்களின் பாதுகாப்பை விட, வெற்று விளம்பரங்களில் மட்டுமே முழுகவனம் செலுத்திக் கொண்டிருக்கும் திமுகவினர், எந்த முகத்தை வைத்துக் கொண்டு தமிழகப் பெண்களின் வீடேறி வாக்கு கேட்பார்கள்? திமுக கரைவேட்டியுடன் எவர் கண்ணில் பட்டாலும் அவர்களை விரட்டியடிக்க எம் தமிழகப் பெண்கள் தயாராகிவிட்டனர்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.