தமிழக செய்திகள்

69 விநாயகர் சிலைகள் தாமிரபரணி ஆற்றில் கரைப்பு

சிவசேனா சார்பில் பொது இடத்தில் வைக்கப்பட்ட 69 விநாயகர் சிலைகள் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன.

களியக்காவிளை,

சிவசேனா சார்பில் பொது இடத்தில் வைக்கப்பட்ட 69 விநாயகர் சிலைகள் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள்

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 18-ந் தேதி இந்து அமைப்புகள் பொது இடம் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து தினமும் பூஜை நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று சிவசேனா (ஷிண்டே) பிரிவு சார்பாக மாவட்டம் முழுவதும் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த சிலைகள் குழித்துறை வாவுபலி திடலுக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எடுத்து வரப்பட்டது. பின்னர் 50 விநாயகர் சிலைகள் தாமிரபரணி ஆற்றின் கரையில் வரிசையாக வைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

ஆற்றில் கரைப்பு

தொடர்ந்து ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி சிவசேனா (ஷிண்டே) பிரிவின் மாநில தலைவர் சிதறால் ராஜேஷ் தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் சுரேஷ் பிரகாஷ் முன்னிலை வகித்தார், மண்டல் தலைவர் உண்ணி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் வீடுகளில் பூஜிக்கப்பட்ட 250 சிறிய விநாயகர் சிலைகளை பெண்கள் வண்ண சேலைகள் அணிந்தபடி வந்து தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர்.

அதேபோல தமிழ்நாடு சிவசேனா சார்பில் மாவட்டம் முழுவதும் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த 19 விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, குழித்துறை வி.எல்.சி திடலில் பூஜைக்கு வைக்கப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிவசேனா மாநில தலைவர் ரமேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலை கரைப்பையொட்டி குழித்துறை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT