தமிழக செய்திகள்

69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 9-ந் தேதி (நேற்று) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான கல்வி, பொருளாதார மேம்பாட்டுப் பணிகளைத் தொய்வின்றி விரைந்து மேற்கொள்ள வேண்டும். இந்த பிரிவினர் மற்றும் சீர்மரபினருக்கான நலத்திட்டங்களை தாமதமுமின்றி செயல்படுத்த வேண்டும்.

அந்த துறையின்கீழ் நடத்தப்படும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தரமான உணவு மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை மேம்படுத்தி மாணவ, மாணவியர்கள் மேற்படிப்புகளில் அதிகளவில் சேர வழிவகை செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு மிதிவண்டிகளைக் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வழங்க வேண்டும். 69 சதவீத இடஒதுக்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு வரும்போது மூத்த வக்கீல்களை நியமித்து 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்.

சலவைப் பெட்டிகள், தையல் எந்திரங்கள் ஆகியவற்றை தாமதமின்றி பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மாற்றுத் தொழில்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும்.

தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியம், சீர்மரபினர் நல வாரியம், உலமா மற்றும் இதரப் பணியாளர்கள் நலவாரியங்கள் மூலமாக உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

நரிக்குறவர் சமுதாய மக்களுக்காக தனி வாழ்விடங்களை உருவாக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

மாவட்டங்களில் செயல்படும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் புனரமைப்புப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு வக்பு வாரியத்தின்கீழ், பதிவு செய்யப்படாத வக்பு வாரியங்களைப் பதிவுசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்பு நிறுவனச் சொத்து ஆவணங்களைக் கணினி மயமாக்கி, வாரிய பணிகள் மற்றும் சேவைகளை இ-சேவையாக மாற்ற வேண்டும்.

தமிழ்நாடு ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜெருசலேம் புனிதப்பயணம் உள்ளிட்ட புனிதப் பயணிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியை உரிய காலத்தில் முறையாக வழங்க வேண்டும்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் ஆகியவற்றின் மூலம் அதிகமான நபர்களுக்கு உரிய காலத்திற்குள் கடன் வழங்க வேண்டும். இந்நிறுவனங்கள் மூலம் கல்விக்கடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினருக்கான சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளான அனைத்து சிறுபான்மையினருக்கும் கல்வி உதவித்தொகை வழங்குதல், சிறுபான்மையின இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி, தொழில்முனைவோருக்கு சிறப்பு பயிற்சி, தொழில் தொடங்க கடன் உள்ளிட்ட பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்