தமிழக செய்திகள்

7 மாத கர்ப்பிணி கொலை: உடலை மூட்டையில் கட்டி கிணற்றுக்குள் வீசிய கொடூரம்

கிணற்றுக்குள் இருந்த மூட்டையில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் இருந்தது.

சேலம்

எடப்பாடி அருகே 7 மாத கர்ப்பிணி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை மூட்டையில் கட்டி கிணற்றுக்குள் வீசியவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மூட்டையில் பிணம்

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே தானகுட்டிவளவு பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் பார்த்தபோது வெள்ளை நிற சாக்கு மூட்டை ஒன்று மிதந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கிணற்றில் மிதந்த மூட்டையை வெளியே எடுத்து பிரித்து பார்த்தனர். அந்த மூட்டைக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, அந்த பெண்ணின் பெயர் கோகிலா (23 வயது) என்பதும், கருங்குள்ளன் வட்டம் பகுதியை சேர்ந்த பேராக்கவுண்டர் மகள் என்பதும் தெரியவந்தது.

அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின.

7 மாத கர்ப்பம்

கல்லூரி படிப்பை முடித்த கோகிலா, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். திருமணமாகாத கோகிலா கடந்த மாதம் 20-ந்தேதி தனக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அவரை குடும்பத்தினர் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் 7 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதை அறிந்த கோகிலா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து விசாரித்தபோது, பக்கத்து ஊரை சேர்ந்த அம்மாசி (26 வயது) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து கோகிலா குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அம்மாசியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊரில் திருவிழா நடப்பதாகவும், அதன்பிறகு கோகிலாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் அம்மாசி கூறியுள்ளார். மேலும் அதுவரை தன்னுடைய வீட்டில் கோகிலா இருக்கட்டும் என்று அவர் அழைத்துச் சென்றதாகவும் தெரிகிறது.

வழக்குப்பதிவு

இதற்கிடையே கடந்த 31-ந்தேதி கோகிலாவை காணவில்லை என்று அம்மாசி, கோகிலா குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கோகிலாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே கிணற்றுக்குள் மிதந்த மூட்டையில் கோகிலாவின் உடல் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT