தமிழக செய்திகள்

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு: அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 7 பேர் பணியிடை நீக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை 7 பேர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றிய அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் உள்ளிட்ட 7 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. சார்பில் மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர் வேட்பாளருக்காக அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அரசின் பொதுத்துறை நிறுவனமான அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றுபவர்கள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்கள் என ஏற்கனவே கூறப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சத்யன், சசிகுமார், வேலுச்சாமி, ராஜகோபால், நடராஜ், கலைஞர் குணசேகரன், முத்துவீரன் ஆகிய 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயிலாக நோட்டீஸ் அனுப்பப்பட் டுள்ளது.