அமைச்சர்கள் ஆய்வு
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று மதுரை மத்திய சிறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர், சிறைத்துறை டி.ஐ.ஜி.பழனி, சிறைத்துறை சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் தங்குமிடம், சமையல் அறை, மருத்துவ அறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். மேலும் அங்குள்ள கைதிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
பேட்டி
பின்னர் வெளியே வந்த அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மத்திய சிறையில் 1,562 கைதிகள் உள்ளார்கள். கதிகள் பலரின் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளோம். மதுரை சிறை ஆங்கிலேயர் காலத்து கட்டிடம் என்பதால் வசதிகளை அதிகரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த ஆட்சியில் கைதிகளின் நலனில் அக்கறை காட்டவில்லை. ஆனால் முதல்-அமைச்சர் ஸ்டாலின், கைதிகள் மீதும் அக்கறை கொண்டவர். எனவேதான் சிறைக்கு நேரில் சென்று கைதிகளை சந்தித்து அவர்களின் குறைகளை போக்குமாறு எங்களை அனுப்பி வைத்துள்ளார். சிறையில் மருத்துவ வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். மதுரை மத்திய சிறை கட்டிடம் பழமையானது என்பதால் வேறு இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவது குறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
நிர்ப்பந்திக்க முடியாது
7 தமிழர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர், ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். இந்த விவகாரத்தில் கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அந்த தீர்மானத்தின் மீது கவர்னர் உரிய முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தினார். தற்போது அது ஜனாதிபதி கையில் உள்ளது. அவரை இதில் நிர்ப்பந்திக்க முடியாது. 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் நிறைய சட்ட சிக்கல்களை உருவாக்க பார்க்கிறார்கள். முதல்-அமைச்சர் ஸ்டாலின் இதில் எந்த சிக்கலிலும் சிக்கிக்கொள்ள மாட்டார்.
நீட் ஆய்வுக்குழு மக்களின் கருத்துக்களை பெறவே நியமிக்கப்பட்டு உள்ளது. கோர்ட்டுக்கு எதிராக அந்த குழு உருவாக்கப்படவில்லை. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நியமிக்கப்பட்டு உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனின் பரோல் குறித்து அவருடய தாயார் மனு கொடுத்தால், அதை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.