சென்னை,
7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதற்கு, பிரதமருக்கோ அல்லது உள்துறை மந்திரிக்கோ, அழுத்தம் கொடுக்க முதலமைச்சர் அஞ்சுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைத்திருக்கும் கவர்னருக்கு, மேலும் தாமதம் செய்யாமல், உடனடியாக அதற்கு ஒப்புதல் அளித்திட உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மத்திய உள்துறை மந்திரிக்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதில் மயான அமைதி காத்துவருகிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதற்குச் சற்றும் சளைத்திடாமல் கவர்னரும் போட்டி அமைதி காக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உளப்பூர்வமாகக் கொடுத்த ஒத்துழைப்பைக் கூட நாகரீகம் இன்றி விமர்சனம் செய்யும் முதல்-அமைச்சர், இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதற்குப் பிரதமருக்கோ அல்லது உள்துறை மந்திரிக்கோ அரசியல்ரீதியாக எவ்வித அழுத்தமும் கொடுக்க ஏனோ அஞ்சுகிறார்.
கவுன்சிலிங் தொடங்கப்பட்டு விட்டநிலையில், அரசுப்பள்ளி மாணவர்களின் கதி என்ன? ஏற்கனவே இரட்டை வேடம் போட்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து நீட் தேர்வை, 2017 முதல் தமிழகத்தில் அனுமதித்தது போல், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இந்த இடஒதுக்கீடு மசோதாவையும் முதல்-அமைச்சர் காற்றில் பறக்கவிடப் போகிறாரா? என்று அதில் தெரிவித்துள்ளார்.