தமிழக செய்திகள்

சென்னையில் 750 புதிய மின்சார பஸ்கள்: முதல்-அமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி நாளை தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதல்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின் சாரபஸ்கள் (மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில்) வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணி மனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனை களில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே. நகர் மற்றும் அய்யப் பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதில் முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப் பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதல்-அமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறார். மேலும், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இருந்து 5 மின்சார பஸ்களை முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில், ஆலந்தூர் மின்சார பஸ் பணி மனைக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று நேரில் சென்று மின்சார உள்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது. மின்னேற்றிகளின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் த.மோகன், இணை மேலாண் இயக்குனர் ராம.சுந்தரபாண்டியன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.