சென்னை,
இந்தியாவில் ரெயில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு புதிய மாற்றங்களை ரெயில்வே வாரியம் கொண்டு வருகிறது. குறிப்பாக, பழைய ரெயில் பெட்டிகளுக்கு பதிலாக, நவீன மற்றும் பாதுகாப்பான எல்.எச்.பி. பெட்டிகள் தயாரிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலை, பஞ்சாப் கபூர்த்தலாவில் உள்ள ஆர்.சி.எப். தொழிற்சாலை, உத்தரபிரதேசத்தில் உள்ள எம்.சி.எப். தொழிற்சாலை ஆகிய 3 ரெயில் பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன.
இங்கு எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில், மின்சார ரெயில் உள்பட அனைத்து வகை ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரெயில் பெட்டிகள் உற்பத்தி செய்யும் பணி ஆண்டுதோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி, 2025-26-ம் நிதியாண்டில் 7,914 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த (2024-25) நிதியாண்டில் தயாரிக்கப்பட்ட 7,134 ரெயில் பெட்டிகளைவிட 11 சதவீதம் அதிகமாகும். அதிகரித்து வரும் பயணிகள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரெயில்வே உள்கட்டமைப்பை நவீனமாக்குவதில் இந்திய ரெயில்வே தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 2004-2014 இடையே இந்திய ரெயில்வே ஆண்டுக்கு சராசரியாக 3,300-க்கும் குறைவான பெட்டிகளையே உற்பத்தி செய்தது. தற்போது மேம்பட்ட இணைப்பு மூலம் உற்பத்தி வெகுவாக அதிகரித்திருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.