தமிழக செய்திகள்

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், ரெயில்வே போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், ரெயில்வே போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலின் ஒரு பகுதியில் சந்தேகப்படும்படி சில பார்சல்கள் கேட்பாரற்று கிடந்தன. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பார்சல்களைக் கைப்பற்றிச் சோதனையிட்டனர்.

சோதனையில் அந்தப் பார்சல்களில் சுமார் 8 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. வெளிமாநிலம் அல்லது வெளி மாவட்டத்திலிருந்து இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பார்சல்களை ரெயில்வே போலீசார், மேல் நடவடிக்கைக்காக மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் யார்? அவர்கள் எந்த ஊரிலிருந்து கஞ்சாவை ஏற்றி வந்தனர்? என்பது குறித்து ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.