சென்னை,
தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்காக மொத்தம் உள்ள காலியிடங்களில் 15 சதவீத இடங்கள் மத்திய அரசின் வசம் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக இதற்கான கலந்தாய்வை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் நிரப்பப்படாமல் மீதம் 86 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய சுகாதாரத் துறைக்குக் கடிதம் எழுதி இருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும் தேதியை மாநில அரசு முன்னதாக அறிவித்து இருந்தது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு இன்று முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.