தமிழக செய்திகள்

நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை 88 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

களக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த நயினார் மகன் ஆறுமுகம்(எ) அருண் (வயது 19) மற்றும் முத்துக்குட்டி மகன் முத்து பாலன்(25) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது

இந்த நிலையில் மேற்சொன்ன 2 பேரும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்டவிரோத குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், களக்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி மேற்சொன்ன நபர்கள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 2 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு இதுவரை 88 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 88 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.