சென்னை,
தமிழகத்தில் புதிதாக ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள், 93 ஊராட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, நிர்வாக வசதிக்காக, புதிய ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த தி.மு.க., ஆட்சியில், புதிய ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, புதிதாக ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள், 93 ஊராட்சிகளை உருவாக்கி உள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலர் பிரசாந்த் வடநேரே, இதற்கான அரசாணையை வெளியிட்டு உள்ளார்.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பண்டலுார்; திருவள்ளூரில் மாதர்பாக்கம்; காஞ்சிபுரத்தில் சாலவாக்கம்; விழுப்புரத்தில் கிளியனுார், கஞ்சனுார்; திருவண்ணாமலையில் மழையூர்; கிருஷ்ணகிரியில் அஞ்செட்டி; கள்ளக்குறிச்சியில் வானபுரம் ஆகிய, ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
இப்புதிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு, மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், நிர்வாக பணிகளை மேற்கொள்ள துணை இயக்குநர் அந்தஸ்தில், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 61; ஈரோட்டில் 9; கோவையில் 7; கள்ளக்குறிச்சி, திருச்சியில் தலா 4; திண்டுக்கல், வேலுாரில் தலா 2; தென்காசி, தர்மபுரி, சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களில், தலா ஒரு ஊராட்சி என, புதிதாக 93 ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.