தமிழக செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

தொழில் நகரமான கோவையில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக வெளிமாவட்டங்களை சேர்ந்த பலர் இங்கு குடும்பத்துடன் வந்து தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வெளியூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர், தனது குடும்பத்துடன் கோவையில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்.

இவருடைய மகளான 5 வயது சிறுமி, வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்போது பக்கத்து வீட்டில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வரும் சசிகுமார்(வயது 57) என்பவர், அந்த சிறுமியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு வந்தாள்.

போக்சோவில் கைது

இதுகுறித்து அந்த சிறுமியிடம், அவளது பெற்றோர் கேட்டபோது, தனக்கு நடந்த கொடுமையை கூறி கதறி அழுதாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இந்த சம்பவம் குறித்து கோவை மேற்கு பகுதி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT