தமிழக செய்திகள்

வீட்டின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து 5-ம் வகுப்பு மாணவன் சாவு

வீட்டின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா அய்யன்பேட்டை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் லோகநாதன். நெசவுத்தொழிலாளி. இவர் தனது குடும்பத்தினருடன் மாடி வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மேற்கூரை சிமெண்டு பூச்சு சிறிதளவு பெயர்ந்த நிலையில் இருந்தது. நேற்று முன்தினம் இரவு லோகநாதன் தனது குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலையில் வீட்டின் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு திடீரென பெரிய அளவில் பெயர்ந்து விழுந்தது.

இதில் லோகநாதனின் 10 வயது மகன் நேதாஜி படுகாயம் அடைந்தான். உடனடியாக நேதாஜியை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேதாஜி பரிதாபமாக உயிரிழந்தான். பலியான நேதாஜி தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT