சென்னை,
காவலர் தினத்தையொட்டி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இன்று பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். கல்லூரி மாணவ-மாணவிகள் என 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கடற்கரைக் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர்.
பொதுமக்கள் கடற்கரைகளை சுத்தமாகப் பாதுகாக்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல் ஆணையர் அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மெரினா கடற்கரையில் காவல்துறை இசைக்குழுவின் சிறப்பு நிகழ்ச்சியும், நகரின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டன.