தமிழக செய்திகள்

சென்னையில் ஜி.என்.டி. சாலையில் ஓட்டுநர் பயிற்சியின்போது திடீரென தீப்பற்றி எரிந்த கார்

காரில் இருந்தவர்கள் சரியான நேரத்தில் காரை விட்டு இறங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

சென்னை,

சென்னை மாதவரம் அருகே ஜி.என்.டி. சாலையில், பயிற்சியின்போது சென்று கொண்டிருந்த தனியார் ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்திற்கு சொந்தமான கார், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்து புகை வெளியேறியதை கவனித்த பயிற்சியாளர், உடனடியாக காரை நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து பயிற்சியாளர் மற்றும் பயிற்சி பெற வந்தவர் உடனடியாக காரில் இருந்து இறங்கினர். அவர்கள் கீழே இறங்கிய சில வினாடிகளில் கார் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. சரியான நேரத்தில் அவர்கள் காரை விட்டு இறங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், பற்றி எரிந்த காரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் ஜி.என்.டி. சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.