தமிழக செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிர முயற்சி, நவீன கேமரா பொருத்திய கருவியை பயன்படுத்தினர்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கேமரா பொருத்திய கருவியை பயன்படுத்தி மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2).

பிரிட்டோ தனது வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் தேவைக்காக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார். சுமார் 400 அடி ஆழத்திற்கு அந்த ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஒரு ஆண்டு வரை அந்த ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் இருந்தது. பின்னர் தண்ணீர் இல்லாத நிலையில், அந்த ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி இருந்தது. இதனால் ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியுள்ளனர். தற்போது அந்த பகுதியில் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் சுமார் 30 அடி ஆழம் வரை கீழே இறங்கியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரிட்டோ வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் கலாமேரி, சுஜித்வில்சனுடன் இருந்தார். மாலை சுமார் 5.30 மணியளவில் சுஜித்வில்சன் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் சோளம் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதில் மண்ணில் உராய்ந்தபடி சென்று அடிப்பகுதியில் சிக்கினான்.

இதைக்கண்ட கலாமேரி அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடிச்சென்றார். குழந்தை அடிப்பகுதியில் சிக்கியிருப்பதை கண்டு அவர் சத்தம்போட்டார். இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். மேலும் உடனடியாக இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பிரிட்டோவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து, பிரிட்டோ பதறியடித்துக்கொண்டு அங்கு வந்தார்.

மேலும் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் போலீசார், மணப்பாறை மற்றும் திருச்சியில் இருந்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து பார்த்து, குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மிகவும் குறுகலான அந்த ஆழ்துளை கிணற்றில், ஆட்கள் யாரும் இறங்க முடியாத நிலையில், கிணற்றின் அருகே குழிதோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்தனர்.

அதன்படி அங்கு 4 பொக்லைன் எந்திரங்கள் உள்ளிட்ட 5 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டது.

இதற்கிடையே அங்கு 108 ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. ஆழ்துளை கிணற்றின் அடிப்பகுதியில் சிக்கியுள்ளதால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் சிறிய டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தும் பணியில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர். மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர்.

மணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் முத்துகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகும் காட்சிகளை டி.வி.யில் பார்வையிட்டு, குழந்தையின் நிலையை கண்காணித்தனர். எந்திரங்கள் மூலம் இரவு 8.15 மணியளவில் சுமார் 17 அடி வரை குழி தோண்டப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு கீழே பாறை இருந்ததால், குழிதோண்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நிபுணர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருடன் சேர்ந்து சுஜித் வில்சனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மணிகண்டன் கண்டுபிடித்துள்ள கருவி மூலம், குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த கருவி மூலம் மீட்பு பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து கணினியால் இயங்கக்கூடிய சுருக்கு கயிறுகள் மூலம் மீட்பு பணி தொடங்கியது. இரவு 11 மணிக்கு மேலாகியும், அந்த பணி தொடர்ந்து நடைபெற்றது. குழாய்களில் கயிறுகளை விட்டு, குழாய்களை பிணைத்து ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கி, குழந்தையை மீட்க முயன்றனர்.

ஆனாலும் குழந்தையின் கைகளில் சரியாக கயிற்றை பிணைக்க முடியாததால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் மீட்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. மீண்டும், மீண்டும் கயிறுகளை ஆழ்துளை கிணற்றில் இறக்கி குழந்தையை மீட்க முயன்றும் முடியவில்லை.

அதிகாலை 3.20 மணிக்கு நாமக்கல்லில் இருந்து வெங்கடேசன் தலைமையில் வந்த ஐ.ஐ.டி. குழுவினர் தாங்கள் கொண்டு வந்த நவீன கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் அங்குலம் அங்குலமாக இறக்கினார்கள். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அந்த கருவி குழந்தை சிக்கி இருந்த இடத்தின் அருகே சென்றது. அப்போது, அங்கு குழந்தை இல்லை. அதில் இருந்து மேலும் 50 அடி, அதாவது 30 அடியில் இருந்து 80 அடிக்கு சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீட்பு குழுவினர் அந்த கருவியை மேலும் கீழே இறக்க முயன்றனர். ஆனால் அந்த இடத்தில் இருந்து அதற்கு மேல் குழி குறுகலாக இருந்ததால், அந்த கருவியை கீழே இறக்க முடியவில்லை. இதனால் அந்த கருவியை மேலே எடுத்து அதில் பொருத்தப்பட்டிருந்த கைகளை மாற்றினார்கள். பின்னர் அதிகாலை 3.50 மணிக்கு மாற்று கைகள் பொருத்தி மீண்டும் அந்த கருவி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கப்பட்டது.

ஆனால் அதுவும் குழந்தை இருந்த இடத்தின் அருகே அதிகாலை 4 மணிக்கு சென்றது. அதற்கு கீழ் மீண்டும் அந்த கருவியை கொண்டு செல்லமுடியவில்லை. இதனால் மீட்பு குழுவினர் செய்வதறியாது திகைத்தனர். அதே நேரம் அந்த நவீன கருவி மூலம் குழந்தை சுஜித் வில்சன் சுவாசிப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அந்த கருவியின் விட்டத்தை குறுகலாக்கி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்க மீட்பு குழுவினர் முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே அதிகாலை 5 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து வீரமணி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் எப்படி குழந்தையை மீட்கப்போகிறோம் என்று விளக்கினார்கள்.

இதை தொடர்ந்து அவர்கள் குழந்தையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். காலை 4.30 மணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவி கோரப்பட்டது. அவர்கள் உடனடியாக சென்னையில் இருந்து நடுகாட்டுப்பட்டிக்கு புறப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து மற்ற குழுவினர் விடிய, விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து முயற்சித்தும் குழந்தையை மீட்க முடியவில்லை. அமைச்சர்கள் வெல்லமண்டிநடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி, கலெக்டர் சிவராசு ஆகியோர் அந்த பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.

2-வது நாளாக நேற்று மீட்பு பணி இடைவெளி இல்லாமல் தொடர்ந்தது. குழந்தை சுஜித் வில்சனை மீட்பதற்காக திருச்சி, மதுரை, நாமக்கல், கோவை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தனித்தனி குழுவினர் வந்தனர். அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த கருவி மூலம் குழந்தையை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒவ்வொரு குழுவினரின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து திரைப்படத்துறையில் சினிமா சண்டை காட்சிகளில் விபத்து ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் குழுவினர், தகவல் அறிந்து சென்னையில் இருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தனர். இந்த குழுவினர் தாங்கள் வைத்திருந்த நவீன எந்திரம் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் குழந்தை சுஜித் வில்சனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. தொடர்ந்து குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதனிடையே மதியம் 12.15 மணி அளவில் மாநில பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் இருந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து 12.35 மணி அளவில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புபடை குழு கமாண்டர் ஆர்.சி.ஓலா தலைமையில் 33 பேர் வந்தனர். இந்த குழுவினர் நவீன கருவிகளை கொண்டு வந்தனர். தேசிய மீட்பு படை குழுவினர் வந்ததும், அவர்களை பணி செய்யவிட்டு, விட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மற்ற குழுவினரும் மற்றும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினரும் விலகி கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அதிநவீன கேமரா பொருத்திய பிரத்யேக கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் விட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மத்திய மண்டல துணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், தென்மண்டல துணை இயக்குனர் சரவணன் தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர். குழந்தை உயிருடன் மீட்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

* நேற்று முன்தினம் மாலை 5.40 மணி: குழந்தை சுஜித்வில்சன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.

* இரவு 7 மணி: தீயணைப்பு மீட்புக்குழு வந்தனர்.

* 7.15 மணி: பொக்லைன் எந்திரம் மூலம் ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டினர்.

* 7.30 மணி: மதுரை குழந்தைகள் மீட்பு நிபுணர் மணிகண்டன் குழுவினர் வந்தனர்.

* 8 மணி: குழிக்குள் குழந்தை அழும் குரல் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

* 8.15 மணி: மணப்பாறை மருத்துவக்குழு மூலம் குழந்தை சுவாசிக்க வசதியாக கருவி மூலம் உள்ளே ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

* 8.30 மணி : அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி, கலெக்டர் சிவராசு, அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

* 9.10 மணி: மதுரை மணிகண்டன், நாமக்கல் டேனியல் குழு மூலம் குழந்தையை மீட்க பிரத்யேக கருவி மூலம் முயற்சித்தனர்.

* 1 0.45 மணி: குழந்தை கைகளில் காப்பு மாட்டி மேலே கொண்டுவரும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

* 11.30 மணி: குழந்தையை கயிறுகட்டி மேலே கொண்டு வரும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டது.

* நேற்று முன்தினம் நள்ளிரவு 12.10 மணி: கோவையில் இருந்து சிறப்பு குழு வந்தது.

* 12.40 மணி: 7 மணி நேரமாக குழந்தை 30 அடி ஆழத்தில் இருந்த நிலையில் மேலும், மேலும் ஆழத்திற்குள் சென்றது.

* 1.15 மணி: கோவை குழு மூலம் குழந்தையின் கைகளை கருவி மூலம் பிடித்து மேலே கொண்டு வரும் முயற்சியில் தோல்வி.

* நேற்று அதிகாலை 1.30 மணி: ஆழ்துளை கிணறு அருகில் மீண்டும் 5 பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்ட முயற்சி.

* 2 மணி: பள்ளம் தோண்டும் முயற்சி தோல்வி.

* 2.15 மணி: நாமக்கல் ஐ.ஐ.டி. குழுவினர் வருகை.

* 2.28 மணி: கிணற்றுக்குள் மேலும் 5 அடி ஆழத்துக்கு குழந்தை சென்றது.

* 2.30 மணி: மேலும் ஒரு ஐ.ஐ.டி. குழு வருகை.

* 2.50 மணி: உருளை சிலிண்டர் மூலம் கிணற்றுக்குள் ஆக்சிஜன் அனுப்பி குழந்தையை சுவாசிக்க முயற்சி மேற்கொண்டனர்.

* 3.45 மணி: குழந்தை மேலும் ஆழத்திற்கு சென்றுவிட்டது.

* 4.30 மணி: தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடம் உதவி கோரப்பட்டது.

* 5 மணி: புதுக்கோட்டை வீரமணி குழுவினர் மூலம் புதிய முயற்சி.

* 6 மணி: குழந்தை 80 அடி ஆழத்திற்கு சென்றது.

* 8 மணி: குழந்தைக்கு பிராணவாயு செலுத்தி இயல்பாக இருக்க வைக்க முயற்சி.

* 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தனியார் மீட்பு குழுவினர் குழந்தையை மீட்க தொடர் முயற்சியில் ஈடுபட்டனர்.

* 12.30 மணி: அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்தனர்.

* பகல் 1 மணி : நவீன கேமரா பொருத்திய கருவியை கொண்டு மீட்க முயற்சி.

* 1.10 மணி முதல் மாலை 5 மணி வரை தேசிய பேரிடர் மீட்பு படையினரின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

* மாலை 5 மணி: நவீன கருவியை சிறுவனின் உடலில் பொருத்தி கிரேன் மூலம் குழந்தையை மீட்க முயற்சி.

* 5 மணி முதல் 6.30 மணி வரை நடந்த இந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.

குழந்தை சுஜித்வில்சன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தகவல் சமூக வலைத்தளம் மூலம் உலக முழுவதும் பரவியது. வாட்ஸ்-அப், பேஸ்புக், டூவிட்டர் உள்ளிட்டவைகளில் குழந்தையை உயிருடன் மீட்க பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளனர். துபாய், சிங்கப்பூர், ரோமன், லண்டன், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழக அதிகாரிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு குழந்தையை மீட்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். மேலும் தங்களது நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகளையும் எடுத்துரைத்தனர்.

சுஜித்வில்சனை உயிருடன் மீட்கவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ ஆலயம், பள்ளி வாசல்களில் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். மணப்பாறையில் உள்ள பள்ளிவாசல், இந்துகோவில்கள், கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்ட இடங்களிலும் மணப்பாறை மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

ஆழ்துளை கிணற்றின் அருகில் அமர்ந்து குழந்தை விழுந்து கிடக்கும் குழியை பார்த்து தாய் கலாமேரி அழுதுகொண்டே இருந்தார். அவ்வப்போது, குழந்தையின் சத்தம் கேட்கும் போது, அழாதே ராசா தூக்கி விடுவேன் என்று கதறியபடியே அவர் கூறியது, அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது. விடிய, விடிய கலாமேரி அமர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் நேற்று காலையில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் வீட்டில் வைத்து கலாமேரிக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது .

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...