சென்னை,
பி.எஸ்.என்.எல் 5ஜி சேவையை உடனே தொடங்க காலக்கெடு அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்(BSNL)-ஐத் திட்டமிட்டுப் பின்தள்ளி, தனியார் பெருநிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் மத்திய பாஜக அரசின் வஞ்சகப் போக்கைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
5ஜி அலைக்கற்றை என்பது இன்றைய காலகட்டத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதார உரிமை. மாணவர்களின் உயர்கல்வி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கிராமப்புறச் சிறுவணிகம் மற்றும் உழவர் பெருமக்களின் அன்றாட அரசு சேவைகளுக்கு அதிவேக இணையம் இன்றியமையாதது.
தனியார் நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலித்துக் கொள்ளையடிக்கும் வேளையில், கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களின் ஒரே புகலிடமாக விளங்கும் பி.எஸ்.என்.எல்-ன் 5ஜி சேவையைத் திட்டமிட்டே முடக்கி வைப்பது எந்த வகையில் நியாயம்?
கார்ப்பரேட் நிறுவனங்கள் நாடு முழுவதும் 5ஜி சேவையைத் தடையின்றி விரிவுபடுத்த அனுமதிக்கும் மத்திய அரசு, மக்களின் வரிப்பணத்தில் உருவான பொதுத்துறை நிறுவனத்திற்குத் தேவையான நவீனக் கருவிகள், நிதி ஒதுக்கீடு மற்றும் தொழில்நுட்ப உரிமங்களை உரிய நேரத்தில் வழங்காமல் முட்டுக்கட்டை போடுகிறது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வலுப்படுத்துவதாக வாய்ச்சவலாகக் கூறிக்கொண்டே, சந்தைப் போட்டியில் இருந்து அதை அப்புறப்படுத்த முயல்வது பிரதமர் நரேந்திர மோடி அரசின் பச்சைத் துரோகம்.
தனியார் பெருமுதலாளிகளின் இலாபத்திற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைப் பலவீனப்படுத்தும் சதித்திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் இழைக்கப்படும் டிஜிட்டல் அநீதிக்கு ஒன்றிய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
பி.எஸ்.என்.எல் 5ஜி சேவை தாமதத்திற்கான காரணங்களை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி, நாடு தழுவிய அளவிலும் குறிப்பாகத் தமிழகக் கிராமப்புறங்களிலும் தரமான அதிவேகச் சேவையைத் தொடங்க உறுதியான காலக்கெடுவை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.