கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பள்ளி மைதானத்தில் உள்ளூர் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு ரன் எடுப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முதலில் சாதாரணமாகத் தொடங்கிய இந்த தகராறு, சிறிது நேரத்திலேயே கைகலப்பாக மாறியது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் ஆகாஷ் மார்பில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆகாஷை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த 4 இளைஞர்களை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.