தமிழக செய்திகள்

மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் குடும்பம்.. திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள் - உதயநிதி ஸ்டாலின் பதிவு

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மரணம் அடைந்த சம்பவத்திற்கு உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை என்ற பெயரில் போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் அநீதி

இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.

போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.

என்ன பதில்

காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.