தமிழக செய்திகள்

ஊர் ஊராக சென்று கழுதைப்பால் விற்பனை செய்யும் குடும்பம்... ஒரு சங்கு 100 ரூபாய் - ஆர்வத்துடன் வாங்கி குடிக்கும் மக்கள்

பெரம்பலுார் மாவட்டத்தின் பல கிராமங்களில், நோய் தீர்க்கும் மருந்து எனக்கூறி கழுதை பால் ஒரு சங்கு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெரம்பலுார்,

பெரம்பலுார் மாவட்டத்தில், துறைமங்கலம், கவுல்பாளையம், நெடுவாசல், சிறுவாச்சூர், நொச்சியம் விளாமுத்துார் உட்பட பல்வேறு கிராமங்களில், ஒரு குடும்பத்தினர், நான்கு வெள்ளை நிற கழுதைகளுடன், ஊர் ஊராக சென்று கழுதைப்பால் விற்பனை செய்கின்றனர். பால் கேட்பவர்களுக்கு, அங்கேயே கறந்து தருகின்றனர். குறிப்பாக, குழந்தைகளுக்காக பலர் பால் வாங்குகின்றனர். ஒரு சங்கு பால் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து கழுதைப்பால் விற்கும் பெண் கூறுகையில், “வி. களத்துார் கிராமத்தை சேர்ந்த நாங்கள், தமிழகம் முழுதும் சென்று, கழுதைப்பால் விற்று வருகிறோம். கழுதைப்பால் மருத்துவ குணம் கொண்டது. அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் தொடர்ந்து குடித்தால் பலன் உண்டு. சிறிய குழந்தைகள் என்றால், ஒரு சங்கு போதும். பெரியவர்களுக்கு, 50 மில்லி கொடுக்க வேண்டும். நாங்கள், பால் விற்பனைக்காகவே கழுதை வளர்க்கிறோம். கழுதையை கிராம பகுதிகளுக்கு ஓட்டிச்சென்று, கலப்படம் இல்லாமல், அங்கேயே கறந்து விற்கிறோம்” என்றார்.

இருப்பினும் இது தொடர்பாக தனியார் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கருணாகரன் கூறுகையில், "கழுதைப்பால், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, மருத்துவ குணம் கொண்டது, நாள்பட்ட நோய்களை தீர்க்கும் என்பது நிரூபிக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர, வேறு எந்த பாலும் கொடுக்கக் கூடாது,'' என்றார்.