தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த விவசாயி ஒருவர், திடீரென பையில் கேனில் வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைபார்த்த போலீசார், விரைந்து சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சங்கராபுரம் தாலுகா மேலப்பழங்கூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயச்சந்திரன் (வயது 42) என்பது தெரியவந்தது. மேலும் மேலப்பழங்கூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு செல்லும் பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்ததன் பேரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். ஆனால் தற்போது மீண்டும் அந்த நபர் பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து அவரிடம் சென்று கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன், அந்த நபர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக கூறினார். இதையடுத்து கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக ஜெயச்சந்திரனை போலீசார் அனுப்பி வைத்தனர். இருப்பினும் இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT