தமிழக செய்திகள்

“ஏழை எளிய மக்களுக்காக உழைத்த மனிதநேயர்” - விஜயகாந்தை புகழ்ந்த உதயநிதி

மறைந்த நடிகர் விஜயகாந்தின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை,

விஜயகாந்தின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

75-வது பிறந்தநாள்

தேமுதிக நிறுவனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான விஜயகாந்த்-ன் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

நினைவிடத்தில் அஞ்சலி

விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து வாழ்த்து மற்றும் புகழஞ்சலி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

"களத்தில் இறங்கி உழைத்த மனிதநேயர்"

அந்த வகையில், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த நடிகர் விஜயகாந்தை புகழ்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "தே.மு.தி.க நிறுவன தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது அளவற்ற அன்பும் - கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தவர். ஏழை எளிய மக்களின் நலனுக்காக களத்தில் இறங்கி உழைத்த மனிதநேயர் அண்ணன் கேப்டன் அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்! அவர் புகழ் ஓங்கட்டும்!". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.