சென்னை,
தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் தங்களது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். வாக்குசெலுத்திவிட்டு கை விரலில் மை வைத்ததை வாலிபர்கள், இளம்பெண்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பத்தூர் தொகுதியில் விசில் சின்னத்திற்கு வாக்களிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக வெளியிட்ட தவெகவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை இணையதளத்தில் வெளியிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வாக்குச்சாவடிக்குள் அவர் வீடியோ எடுப்பதை சிசிடிவி மூலம் அதிகாரிகள் உறுதி செய்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.