தமிழக செய்திகள்

நெல்லை அருகே தோட்டத்தில் அரிதாக மலர்ந்த சேனைக்கிழங்கு பூ

நெல்லை டவுன், பாறையடி பகுதியில் தோட்டத்தில் வளர்க்கப்பட்டிருந்த சேனைக்கிழங்கு செடியில் அரிதாக பூ பூத்துள்ளது.

நெல்லை,

நெல்லை அருகே டவுன் பாறையடி பகுதியில் தோட்டத்தில் அரிதாக மலர்ந்த சேனைக்கிழங்கு பூவை அப்பகுதி பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

அரிதாக மலர்ந்த சேனைக்கிழங்கு பூ

நெல்லை டவுன் பாறையடி பகுதியை சேர்ந்த சண்முகராஜ், விவசாயி. இவரின் தோட்டத்தில் வளர்க்கப்பட்டிருந்த சேனைக்கிழங்கு செடியில் அரிதாக பூ பூத்துள்ளது. தாவரவியல் ரீதியாக சேனைக்கிழங்கு அடிக்கடி பூக்காத தாவரமாகும். இதன் பூ பழுப்பு மற்றும் ஊதா நிறம் கலந்த பெரிய கிண்ணம் போன்ற தோற்றத்துடன், நடுவில் தடிமனான கம்பு போன்ற அமைப்பை கொண்டிருக்கும்.

பார்வையிட்ட பொதுமக்கள்

இந்த மலர் பொதுவாக 4 முதல் 5 நாட்கள் மட்டுமே நீடிக்கும். மகரந்த சேர்க்கைக்காக ஈக்களை ஈர்க்கும் நோக்கில், பூ பூத்தது முதல் சில நாட்களில் அழுகிய இறைச்சியை போன்ற கடுமையான நாற்றத்தை வெளியிடும் தனித்தன்மையும் கொண்டது. இந்த நிலையில் இந்த பூ, அறுவடை செய்யாமல் விடப்பட்ட சேனைக்கிழங்கு அழுகிய பிறகு அதிலிருந்து வந்த செடியில் பூத்த பூவாகும். இந்த பூவை காண்பதற்காக அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் சண்முகராஜின் தோட்டத்துக்கு வந்து பார்வையிட்டு வருகின்றனர்.