விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41). இவர் விழுப்புரம் மந்தக்கரை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய கடைக்கு விழுப்புரம் முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியை சேர்ந்த ஷேக்அஸ்கர் (வயது 30) என்பவர் அடிக்கடி உணவு சாப்பிட செல்வார். அப்போது அவர்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதே பகுதியில் சுரேஷ் நடந்து சென்றபோது அவரை ஷேக்அஸ்கர் வழிமறித்து தான் வைத்திருந்த கத்தியால் இடுப்பில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ஷேக்அஸ்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.