தமிழக செய்திகள்

வளர்ப்பு நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர்

நெல்லை பேட்டையை சேர்ந்த ஒருவர், செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்.

நெல்லை,

நெல்லை பேட்டை ராம்நகர் பகுதியை சேர்ந்த சிவா செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். தனது வீட்டில் வேட்டை இன நாய்கள், புறாக்கள், வாத்துகளை வளர்த்து வருகிறார். அதில் 'குட்டி' என பெயரிடப்பட்ட நாய் அவருக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்துள்ளது. இந்த நாய் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தது.

கண்ணீர் அஞ்சலி பேனர்:

இதனால் மனமுடைந்த சிவா, தனக்கு நெருக்கமான சகோதரனை இழந்தது போல் கருதினார். இந்த துயரத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட அவர், மனிதர்களுக்கு வைப்பதை போலவே தனது செல்ல நாய்க்கும் படத்துடன் கண்ணீர் அஞ்சலி பேனர் தயார் செய்தார்.

மலர் அஞ்சலி:

'குட்டி உன்னை தவற விட்டுவிட்டோம். மறக்க முடியாத நினைவு நீ குட்டி (எங்கள் சகோதரர்)' என்ற உருக்கமான வாசகத்துடன் தயாரான பேனரை நெல்லை பேட்டை செக்கடி பஸ் நிறுத்தம் மற்றும் தெருமுனையில் வைத்துள்ளார். பேனருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்த காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.