சென்னை சூளைமேடு, பெரியார் பாதையில் நடந்து சென்ற வாலிபர் ஒருவர், திடீரென அங்கு சாலையோரம் நிறுத்தி இருந்த 4 கார்களின் முன்பக்க கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்தார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், வாலிபரை மடக்கி பிடித்து வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சென்னை அமைந்தகரை, அய்யாவு காலனியை சேர்ந்த சாகித்யன் (வயது 23) என்பது தெரியவந்தது. இவர், அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியபோது அங்கு வந்த சில நபர்கள் சாகித்யனிடம் தகராறு செய்து அவரை தாக்கிவிட்டு செல்போனை பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாகித்யன், அந்த வழியாக நடந்து சென்ற போது சாலையில் நிறுத்தி இருந்த கார்களின் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்தது தெரியவந்தது. இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகித்யனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.