சேத்துப்பட்டு அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
பாலியல் பலாத்காரம்
சேத்துப்பட்டு தாலுகா அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் கடந்த 2015-ம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று திருவண்ணாமலை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் கோட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை நீதிபதி பார்த்தசாரதி விசாரித்தார்.
10 ஆண்டு சிறை
நேற்று அவர் தனது தீர்ப்பில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிரபாகரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.