தமிழக செய்திகள்

வீட்டு மாடியில் செல்போனில் பேசியபோது தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

கோவில்பட்டியில் வாலிபர் ஒருவர், வீட்டின் மாடியில் உள்ள கைப்பிடிச் சுவர் மீது அமர்ந்தபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வீட்டு மாடியில் கைப்பிடிச் சுவரில் அமர்ந்து செல்போனில் பேசியபோது தவறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜுவ் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த கோபால் மகன் பாலச்சந்தர் (வயது 29). வாகன ஓட்டுநரான இவர், கடந்த ஜூன் 28-ம் தேதி இரவு தனது வீட்டின் மாடியில் உள்ள கைப்பிடிச் சுவர் மீது அமர்ந்தபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்த பாலச்சந்தருக்கு தலை மற்றும் உடலின் முக்கிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

வாலிபர் உயிரிழப்பு

உடனே அவரை மீட்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பாலச்சந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த பாலச்சந்தருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.