மதுரை,
எப்.கியூ..எல் முதலீட்டு மோசடியில் பணத்தை இழந்த இளைஞர் ராசு என்பவர் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பொது மக்களிடம் பலர், எப்.கியூ..எல். நிறுவனம் என்ற நிதி நிறுவனம் சார்பில் செல்போன் செயலிகள் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக நேரில் வந்து ஆசைவார்த்தை கூறியுள்ளனர். குறிப்பாக பெண்களிடம் பேசினர். இதற்காக ஏஜெண்டுகள் செயல்பட்டனர்.
இந்த செயலிகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் கடன் வாங்கி முதலீடு செய்தனர். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு பணத்தை இரட்டிப்பு செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மேலூர், சிவகங்கையில் தொடர்ந்து போலீசாரிடம் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.
எப்.கியூ..எல். முதலீட்டு மோசடி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், பணத்தை இரட்டிப்பாக்குவதாக நடந்த ஆன்லைன் மோசடியில் பாதிக்கப்பட்ட நத்தம் பகுதியைச் சேர்ந்த ராசு (வயது 26) என்ற இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என நினைத்திருந்த நிலையில் மோசடியால் பணம் போச்சே என்ற நிலையில் ராசு சில நாட்களாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மோசடி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இளைஞர் மரணத்துக்கு நீதி வேண்டியும் திண்டுக்கல் - மதுரை சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.