கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்

வாலிபரின் நண்பர்களும் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு மனுவை அளித்தனர். அதில், வனவாசியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் எங்களது மகளை அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (23 வயது) என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நண்பர் ஒருவரின் வீட்டில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், ஏழுமலையின் நண்பர்களும் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. அதன்பிறகு சிறுமி கர்ப்பம் அடைந்ததால் மருத்துவமனையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாணவியை பலாத்காரம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஓமலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.