தமிழக செய்திகள்

மதுபோதையில் பொதுமக்களை அரிவாளுடன் மிரட்டிய வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பஜார் பகுதியில் வாலிபர் ஒருவர், மதுபோதையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பஜார் பகுதியில் மதுபோதையில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அரிவாளை காட்டி மிரட்டல்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் வசித்து வரும் இசக்கி மகன் ஜெயமணிகண்டன் (வயது 25). இவர் கயத்தாறு மதுரை பிரதான சாலை, பஜாரில் ஐயர் பாலத்தின் அருகே உள்ள ஒரு தனியார் விடுதி முன்பு மதுபோதையில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களையும், பொதுமக்களையும் அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார்.

வாலிபர் கைது

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜெயமணிகண்டனை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அவர் கையில் வைத்திருந்த அரிவாளை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.