சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சேவினிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (29 வயது). இவர் திருமண இணையதளம் மூலமாக தனக்கு வரன் தேடி உள்ளார். அதனை அறிந்த இளம்பெண் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். பின்னர் அந்த பெண், நமது எதிர்கால வாழ்க்கைக்காக ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்யும்படி ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய சத்தியமூர்த்தி, அந்த பெண் கூறிய வங்கிக் கணக்குகளில் 52 தவணையாக மொத்தம் ரூ.45 லட்சம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் தொடர்பை துண்டித்தார். சத்தியமூர்த்தியாலும் அப்பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.