மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டிமுருகன் என்பவரின் மகள் தர்ஷினி (வயது 20). இவரும், இவரது உறவினரான தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரத்தீஸ்வர்(24) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு, காயல்பட்டினம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்ற தர்ஷினியை, அவர்கள் சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தர்ஷினி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தகவலறிந்த ஆறுமுகநேரி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தர்ஷினியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி தந்தை பாண்டிமுருகன் போலீசில் புகார் அளித்துள்ளார். திருமணமான 2 ஆண்டுகளுக்குள் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால், சட்ட விதிமுறைப்படி திருச்செந்தூர் சார் ஆட்சியர் கவுதம் இந்த சம்பவம் குறித்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.