கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி வாலிபரிடம் ரூ.20.80 லட்சம் மோசடி

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி வாலிபரிடம் ரூ.20.80 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சிங்கம்துரை (35 வயது). கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவரது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்று விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அந்த விளம்பரத்தை பார்த்து அதில் தொடர்பு கொண்டார்.

பின்னர் அதில் உள்ள ஒரு குழுவில் சிங்கம்துரை இணைந்தார். இதை தொடர்ந்து டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் 87 தவணைகளில் ரூ.20 லட்சத்து 80 ஆயிரத்தை அவர் செலுத்தியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் விளம்பரத்தார் லாபத்தொகையை கொடுக்காமல் மேலும் பணம் செலுத்தும்படி கூறினார்களாம். இதனால் சந்தேகம் அடைந்த சிங்கம்துரை இதுகுறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.