வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் மாவட்ட ஆவின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பால் குளிரூட்டும் நிலையத்துடன் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பிரிவுடன் மதிப்பு கூட்டப்பட்ட பால் உப பொருட்கள் தயாரிப்பு பிரிவும்இயங்கி வருகிறது. ஆவின் உதவி பொதுமேலாளராக மகேந்திரமால் (வயது 57) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். வேலூர் தென்றல் நகரில் உள்ள அவரது வீட்டில் நடத்திய சோதனையில் நாட்டு கைத்துப்பாக்கி ஒன்றும், 8 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தத் துப்பாக்கிக்கு லைசென்சு இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட 8 குண்டுகளில் 6 குண்டுகள் இந்த துப்பாக்கியில் பயன்படுத்தப்படுபவை. மேலும் 2 குண்டுகள் வேறு ரக துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய வகையைச் சேர்ந்தது. எனவே அந்த குண்டுகளுக்கான துப்பாக்கியை வேறு எங்காவது பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கைதான மகேந்திரமால் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட மகேந்திரமால், இந்த துப்பாக்கியை எப்போது வாங்கினார் என்பது குறித் து விசாரித்து வருகின்றனர்.