தி.மு.க. தேனி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வு நேரத்தில் ஒரு குளத்தில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருப்பது போல புகைப்படத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டு இருந்தார்.
அந்த புகைப்படத்தை சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஜான்ரவி என்பவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டு, முதல்-அமைச்சர் குறித்து தரக்குறைவான வார்த்தைகளுடன் பதிவேற்றம் செய்துள்ளார். முதல்-அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் டுவிட்டரில் அவதூறு பரப்பிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.