தமிழக செய்திகள்

ஐகோர்ட்டு பரிந்துரையை ஏற்று; தமிழக அரசு கள் விற்க அனுமதி வழங்க வேண்டும்- என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்

தமிழகத்தை 4 புறமும் சுற்றியுள்ள மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை விதித்திருப்பது ஏற்புடையல்ல என பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் கள் இறக்குவதற்கு தடை விதித்திருப்பதால் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பனைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் தடை ஏன்?

இதை தமிழக அரசு நன்கு அறிந்த போதிலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி போன்று தமிழகத்தை 4 புறமும் சுற்றியுள்ள மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லாதபோது நடுவில் உள்ள தமிழ்நாட்டில் மட்டும் தடை விதித்திருப்பது ஏற்புடையல்ல.

கள் விற்க அனுமதி வழங்க வேண்டும்:

டாஸ்மாக் கடைகளில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய மது வகைகளை விற்பனை செய்வதை குறைத்துக்கொண்டு, உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடிய கள் விற்பனை செய்ய அரசு முன்வர வேண்டும். சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் பரிந்துரையை ஏற்று கள் இறக்கி விற்பதற்கான தடையை நீக்கி, கள்ளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.