தூத்துக்குடி,
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (38) ஓட்டி வந்த வேனில், ஒரு குழுவினர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணி அளவில், தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள அணுகுசாலை அருகே வேன் சென்றுகொண்டிருந்தது.
அப்போது சாலையில் நின்றுகொண்டிருந்த கனரக லாரி மீது வேன் திடீரென பலமாக மோதியது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மணிகண்டன், மல்லிகா (58), ஆனந்தன் (39), ராஜேஸ்வரி (39), குணசேகரன் (37), சிறுவர்கள் ஹரீஸ்குமார் (11), ஹரீஸ்மா (5) ஆகிய 7 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.