தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் 234 மையங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது

தமிழகம் முழுவதும் 234 மையங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் வரும் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 3 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.

எனவே, தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் உள்ளிட்டோர் முன்கூட்டியே தங்களது வாக்குகளை அளிப்பதற்காக தபால் ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதிக்கு ஒன்று வீதம் 234 மையங்கள் தபால் ஓட்டுப்பதிவுக்காக அமைக்கப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற நிலையில், தபால் ஓட்டுப்பதிவும் தொடங்கியது. தபால் மூலம் அனுப்பி வாக்களிப்பவர்களுக்கு விண்ணப்ப படிவம் எண் 12 வழங்கப்பட்டது. அதேபோல், சொந்த தொகுதியிலேயே தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தேர்தல் நாளிலேயே அங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்கான தேர்தல் பணி படிவம் 12 (ஏ)-வும் வழங்கப்பட்டது.

தபால் மூலம் வாக்களிப்பவர்கள், உடனடியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தபால் ஓட்டுச் சீட்டில் யாருக்கு வாக்கு? என்பதை கருப்பு மையால் டிக் செய்து, கெசட்டட் ரேங்க் அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி, அங்குள்ள பெட்டியில் போட்டனர். சென்னையில் மட்டும் 16 மையங்களில் தபால் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வாக்களித்தனர். தொடர்ந்து, அடுத்த வாரம் நடைபெறும் தேர்தல் பயிற்சி வகுப்பு நாள் அன்றும், தபால் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு, தபாலில் அனுப்பி வாக்களிக்கலாம். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 23-ந் தேதிக்கு முன்பு வரை இவர்களால் வாக்களிக்க முடியும்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, பல்வேறு குளறுபடிகளால் தபால் ஓட்டுகள் பல செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதேபோன்ற நிலை இந்த முறையும் தொடர்வதாக தேர்தல் பணி அலுவலர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் முருகேசன் என்பவர் கூறும்போது, தபால் மூலம் வாக்களிப்பவர்கள் கெசட்டட் ரேங்க் அதிகாரியிடம் கையெழுத்து வாங்க வேண்டியுள்ளது. அந்த வகையில், தாசில்தார், அரசு டாக்டர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோரிடம்தான் கையெழுத்து வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதுவும் முறையாக தெரிவிக்கப்படவில்லை. எனவே, தேர்தல் அதிகாரிகள் தபால் ஓட்டு போடுவது குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லை என்றால், தபால் ஓட்டுகள் செல்லாமல் போக அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்