தாம்பரம் மாநகராட்சியில் கவுன்சிலர்களுடன் கலந்துரையாடல் மற்றும் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு புகார்களை அமைச்சரிடம் தெரிவித்தனர். அதில், மக்கள் பணிகள் குறித்து எந்த ஒரு கோரிக்கையும் கவுன்சிலர்கள் சார்பில் அதிகாரிகளிடம் கொடுத்தால் அதனை அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக தெரிவித்தனர்.
அப்போது கவுன்சிலர்கள் தெரிவிக்கும் புகார்களையும், கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். கவுன்சிலர்களை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அதிகாரிகளை எச்சரித்தார்.